இலங்கை–இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. சஞ்சு சாம்சன் சதம் அடித்தார்.
பயிற்சி கிரிக்கெட்
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 16–ந்தேதி கொல்கத்தா ஈடன்கார்டனில் தொடங்குகிறது.
முன்னதாக இலங்கை அணி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிராக மோதிய 2 நாள் பயிற்சி ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்புர் பல்கலைக்கழக மைதானத்தில் நடந்தது.
இலங்கை 411 ரன்கள் குவிப்பு
முதலில் ஆடிய இலங்கை அணி முதல் நாளில் 88 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 411 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. போதிய வெளிச்சம் இல்லாததால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சமரவிக்ரமா 74 ரன்னும், கருணரத்னே 50 ரன்னும், மேத்யூஸ் 54 ரன்னும் எடுத்தனர். விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா 73 ரன்களுடனும், ரோஷன் சில்வா 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் தரப்பில் ஆகாஷ் பன்டாரி, சந்தீப் வாரியர் தலா 2 விக்கெட்டும், அவேஷ்கான், ஜலஜ் சக்சேனா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
அதிர்ச்சி தொடக்கம்
நேற்று 2–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தன்மாய் அகர்வால், ஜிவான்ஜோத்சிங் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
10 ஓவர்களில் இந்திய வாரிய தலைவர் லெவன் அணி 31 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி தொடக்கம் கண்டது. தொடக்க ஆட்டக்காரர் தன்மாய் அகர்வால் (16 ரன்) திரிமன்னே பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த ஆகாஷ் பன்டாரி (3 ரன்), திரிமன்னே பந்து வீச்சில் தசுன் ஷனகாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
சஞ்சு சாம்சன் 128 ரன்கள்
அடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன், ஜிவான்ஜோத்சிங்குடன் இணைந்தார். சஞ்சு சாம்சன் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டார். சற்று தாக்குப்பிடித்து ஆடிய ஜிவான்ஜோத்சிங் 35 ரன்னில் (99 பந்துகளில் 3 பவுண்டரியுடன்) தில்ருவான் பெரேரா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களம் கண்ட ரோஹன் பிரேம் (39 ரன், 61 பந்துகளில் 5 பவுண்டரியுடன்) தனஞ்செயா டி சில்வா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார்.
அணியின் ஸ்கோர் 255 ரன்னை எட்டிய போது பொறுப்புடன் ஆடி சதம் அடித்து அசத்திய சஞ்சு சாம்சன் 143 பந்துகளில் 19 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 128 ரன்கள் எடுத்த நிலையில் சமரவிக்ரமா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
ஆட்டம் டிரா
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணி 75 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்து இருந்த போது இரு அணி கேப்டன்களின் ஒப்புதலுடன் ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. அப்போது பவனகா சந்தீப் 33 ரன்னுடனும் (74 பந்துகளில் 3 பவுண்டரியுடன்), ஜலஜ் சக்சேனா 20 ரன்னுடனும் (50 பந்துகளில் 3 பவுண்டரியுடன்) ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றனர்.
நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணி 14 வீரர்களை பந்து வீச பயன்படுத்தியும் எதிர்பார்த்தபடி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி தரப்பில் திரிமன்னே 2 விக்கெட்டும், தில்ருவான் பெரேரா, தனஞ்செயா டி சில்வா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.