யாழ்ப்பாணம் - மல்லாகம் சகாயமாதா தேவாலயத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று மல்லாகம் நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.அதேநேரம், யாழ்ப்பாணம் - மல்லாகத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்ட பா.
சுதர்ஷனின் பிரேத பரிசோதனை நேற்று இடம்பெற்றது.யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி உருத்திரமூர்த்தி மயூரதனினால் இந்த பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பின்னர்சடலம் நேற்றிரவு 7.15 அளவில் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாண மாவட்ட மனித உரிமைகள் ஆணையாளர் கனகராஜ் தலைமையில் விசேட விசாரணை இடம்பெறுகிறது.அவர் தலைமையிலான குழு நேற்று சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட ஐவரும் பொதுமகன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் - சகாயமாதா தேவாலயத்தின் பூஜை நிகழ்வின் போது, இரண்டு தரப்புக்கு இடையில் குழப்பம் ஏற்பட்டதாகவும், அதனைத் தடுப்பதற்காக சுன்னாகம் காவற்துறை நிலைய அதிகாரிகள் சிலர் முயற்சித்தாகவும், இதன்போது தாக்க முற்பட்ட ஒருவரை காவற்துறை அதிகாரி தமது துப்பாக்கியால் சுட்டதாகவும் காவற்துறைத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
சம்பவத்தில் கொல்லப்பட்ட பாக்கியராசா சுதர்சன் என்ற 22 வயதான வாலிபரின் உறவினர் ஒருவர், தம்மையே சிலர் தாக்க வந்ததாகவும், இதன்போது குறித்த துப்பாக்கித்தாக்குதல் இடம்பெற்றதாகவும் கூறியுள்ளார்.